
அன்றாட வாழ்வில் நம்மில் ஒவ்வொருவரும் வீட்டிலிருந்து வெளியே சென்று திரும்பும் வரை, தெருநாய்களை கடந்து வராமல் இருந்திருக்க முடியாது. தெருநாய்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் வரை எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நம்மை துரத்த தொடங்கும்போது பிரச்னையே தொடங்குகிறது.
வாக்ஹ் பக்ரி (Wagh Bakri) தேயிலை நிறுவன குழுமத்தின் நிர்வாக இயக்குநர் 49 வயதான பராக் தேசாய் தெருநாய் துரத்தியதில் கீழே விழுந்து, முடிவில் சிகிச்சை பலனின்றி ஏழே நாட்களில் உயிரிழந்திருக்கிறார். அக்டோபர் 15ஆம் தேதி குஜராத்தின் அஹமதாபாத் நகரில் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த பராக் தேசாயை தெருநாய் ஒன்று துரத்தி கடிக்க முற்பட்டதில் கீழே விழுந்துள்ளார் அவர். அப்போது தலையில் அடிபட்டு அவர் மயக்கமடைந்திருக்கிறார்.
உடனடியாக அவரது வீட்டின் பாதுகாவலர், உறவினர்களிடம் கூற அவரை மிகவிரைவாக அழைத்துச் சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு BRAIN HAEMORRHAGE ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். பிறகு 7 நாட்கள் வென்டிலேட்டரில் இருந்த பராக் தேசாய், சிகிச்சை பலனின்றி அக்டோபர் 22ஆம் தேதி உயிரிழந்தார்.
அமெரிக்காவின் லாங் ஐலேண்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. பயின்ற பராக் தேசாய், வணிக உலகில் 30 ஆண்டுகளாக மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர். தேயிலை தொழிலில் உள்ள நுணுக்கங்களை கற்றறிந்தவர் என அறியப்படும் பராக் தேசாய், இந்திய தொழிற் கூட்டமைப்பில் அங்கம் வகித்தவர். 1,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வாக்ஹ் பக்ரி (WAGHBAKRI) நிறுவனத்தின் விற்பனை, சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி உள்ளிட்ட செயல்பாடுகளை கவனித்து வந்தவர் பராக் தேசாய். அவருடைய இழப்பு வணிக உலகில் பேரிழப்பாக அமைந்துள்ளது.
பலகோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பொருளாதாரத்தில் உயர் பிரிவில் இருக்கும் பராக் தேசாயை ஒரு நல்ல அதிநவீன மருத்துவ உபகரணங்களை கையாளும் மருத்துவமனையில்தான் சிகிச்சைக்கு அனுமதித்திருக்கின்றனர். தலைசிறந்த மருத்துவர்கள் கூட அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.
இருப்பினும், “அவரை நாய் கடிக்கவில்லை. நாய் துரத்தியதில் கீழே விழுந்து தலையில் ரத்தக்கட்டு ஏற்பட்டு இறந்துள்ளார். அவர் உடம்பில் நாய் கடித்ததற்கான காயங்கள் எதுவும் இல்லை” என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, மருத்துவ வசதிகளை சரிவர பெறமுடியாத வெகுஜன மக்கள் பலரும் தெருநாய்கள் கடித்து படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவது தொடர்கதையாகவே உள்ளது. தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது, முறையாக தடுப்பூசி போடுவது போன்ற நடவடிக்கைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொள்வது அவசியமாகிறது