உ.பி. | ஒரே நபரை மணந்த மூன்று சகோதரிகள்.. கவனத்தை ஈர்த்த பதில்!
உத்தரப்பிரதேசத்தில் ஆண் நபர் ஒருவரை, 3 சகோதரிகள் திருமணம் செய்திருப்பது பரபரப்பையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும், அந்தத் திருமணத்தை நியாயப்படுத்தி சகோதரிகள் விளக்கமளித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்தியாளர்; M.மீரா
உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் ஒரே நபரைத் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்திற்குப் பிறகு பிரிந்து வாழ்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாததாலேயே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் திருமண நிகழ்வின் காணொளிகள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
ஹசன்பூரின் தௌரியா கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான சரோஜ் (20), சாவித்திரி (19) மற்றும் சந்தோஷ் (18) ஆகியோர் சமூக ஊடகங்களில் காணொளிகளை உருவாக்குபவர்கள் . 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' செய்தி அறிக்கையின்படி, இவர்கள் மூவரும் ஜூலை 17 அன்று சாமுண்டா மாதா கோயிலில் வைத்து, விகாஸ் என்ற கேமராமேனைத் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணச் சடங்குகளை நிறைவு செய்தபிறகு, விகாஸ் அந்தச் சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் குங்குமம் வைப்பதை அக்காணொளிகளில் காண முடிகிறது. இந்நிகழ்வின்போது இரு தரப்பு குடும்பத்தினரும் உடனிருக்கவில்லை. ஒரே நபரைத் திருமணம் செய்துகொள்ளத் தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தை விளக்கிய சரோஜ், தாங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே இருந்ததாகவும், தங்கள் குடும்பத்தினர் தங்களுக்குத் தனித்தனியாகத் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டிருப்பதை அறிந்ததும் மிகுந்த மனவேதனைக்குள்ளானதாகவும் கூறியுள்ளார்.
விகாஸ் கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்துள்ளார். மேலும், அவர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடக வீடியோக்களில் பெரும்பாலும் கணவர் வேடத்தில் நடித்தும் வந்தார் என்று அச்சகோதரிகள் கூறியுள்ளனர். ’’அந்த மூன்று சகோதரிகளும் ஒருவருக்கொருவர் எவ்வளவு ஆழமான பிணைப்பைக் கொண்டிருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். திருமணத்திற்குப் பிறகு தாங்கள் பிரிந்து வாழ விரும்பவில்லை என்று அவர்கள் என்னிடம் பலமுறை கூறினார்கள். அவர்களின் உணர்வுகளை மதித்த நான், அவர்கள் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று விரும்பியதால் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டேன்’’ என்று விகாஸ் கூறியுள்ளார்.
இவர்களின் திருமணம் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், அந்தச் சகோதரிகள் தங்கள் திருமணத்தை நியாயபடுத்தி மற்றொரு காணொளியை வெளியிட்டனர். பண்டைய காலத்தில் தசரத மன்னர் இருந்தார்; அவருக்கு மூன்று ராணிகள் இருந்தனர். அது அப்போது அவமானமாகக் கருதப்பட்டதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

