ஆந்திரா | ஓடும் ரயிலில் இருந்து குதித்த உணவு டெலிவரி ஊழியர் காயம்., வைரலாகும் வீடியோ.!
ஆந்திர மாநிலம் அனந்தபூர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த ஸ்விக்கி விநியோக ஊழியர் ஒருவர் காயமடைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம், உணவு விநியோகத் துறையில் உள்ள அபாயங்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
அனந்தபூர் ரயில் நிலையத்திற்கு வந்த பிரசாந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், முதல் வகுப்பு ஏசி (1st AC) பெட்டியில் இருந்த பயணிக்கு உணவு வழங்க ஸ்விக்கி ஊழியர் ரயிலில் ஏறியுள்ளார். அந்த ரயில் அங்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே நிற்கும் நிலையில், உணவு வழங்கி முடிப்பதற்குள் ரயில் புறப்படத் தொடங்கியது. பதற்றமடைந்த அந்த ஊழியர், தனது இருசக்கர வாகனம் மற்றும் அடுத்தடுத்த டெலிவரி ஆர்டர்கள் ரயில் நிலையத்திற்கு வெளியே இருந்ததால், ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், அவர் தடுமாறி விழுந்து காயமடைந்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் உணவு விநியோக ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. 2 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் ரயில்களில், இருக்கைக்கே சென்று உணவு வழங்கும் முறை ஊழியர்களுக்கு மிகுந்த ஆபத்தை விளைவிப்பதாக இப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அடுத்தடுத்த ஆர்டர்களை முடிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் நேரக் கட்டுப்பாடு காரணமாகவே ஊழியர்கள் இத்தகைய உயிருக்கு ஆபத்தான முடிவுகளை எடுக்கின்றனர் எனவும் பயணிகள் ரயிலின் உள்ளே உணவுக்காகக் காத்திருக்காமல், பிளாட்பாரத்திற்கு வந்து உணவைப் பெற்றுக் கொள்ளும் முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஸ்விக்கி நிறுவனத்தின் விளக்கம்:
இந்த விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்விக்கி நிறுவனம், ”பாதிக்கப்பட்ட ஊழியர் தற்போது பாதுகாப்பாக உள்ளார். இந்தத் தவறுக்காக அவருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. ஓடும் ரயிலில் ஏறுவதோ அல்லது இறங்குவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

