நாகாலாந்தில் அரசு அலுவலகங்களுக்குத் தீவைத்த போராட்டக்காரர்கள்
நாகாலாந்தில் போராட்டம் நடத்திவரும் பழங்குடியினர் கொஹிமாவில் உள்ள அரசு அலுவலகங்களுக்குத் தீ வைத்தனர்.
தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் பழங்குடியினர் கடந்த 2 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். போலீசார் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு இளைஞர்களின் உடல்கள் திபாபூருக்கு இன்று எடுத்து வரப்பட்டதை அடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. தலைநகர் கொஹிமாவில் பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் துணை ஆணையர் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் டி.ஆர்.ஜெய்லிங் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகும்வரை அந்த இளைஞர்களின் உடலை புதைக்க மாட்டோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக போராட்டம் காரணமாக பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெறுவதாக இருந்த நகராட்சிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.