பசுமாடுகளை மகாராஷ்ட்ராவுக்கு அனுப்ப இருந்த மாட்டு வியாபாரிகளைக் கட்டி வைத்து, ’கோமாதாவுக்கு ஜே’ என்று கோஷம் போட வைத்த கிராமத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள சன்வாலிகேடா கிராமத்தில் சிலர், பசுமாடுகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இந்த மாடுகளை மகாராஷ்ட்ரா மாநிலத்துக்கு அனுப்ப இருந்தனர். அப்போது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100 பேர், மாடுகளை லாரியில் ஏற்றிய 25 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களை கயிற்றால் கட்டி வரிசையாக முட்டி போட வைத்தனர். பின்னர், காதுகளை பிடித்துக்கொண்டு ’கோமாதா கி ஜே’ என்று கோஷம் போடுமாறு மிரட்டினர். பிறகு அவர்களை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து அவர்கள், கோமாதா கி ஜே என்று கோஷம் போட்டனர். பின்னர் ஊர்வலமாக 2 கி.மீ நடத்திச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தி, அனுமதி இல்லாமல் பசுக்களை அனுப்ப இருந்ததாக, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை மோசமாக நடத்திய கிராமத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். ‘’மாடுகளை ஏற்றிய 21 லாரிகளை பறிமுதல் செய்துள்ளோம். மாடுகளையும் மீட்டுள்ளோம்’’ என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.