‘தான் ஒரு விவசாயி என்பதை முதல்வர் பழனிசாமி மறக்கவில்லை’ - வெங்கையா நாயுடு பாராட்டு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வயலில் இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி வயலில் இருப்பது போன்ற படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சில கருத்துகளையும் பதிவிட்டுள்ளார். முதலமைச்சர், தான் ஒரு விவசாயி என்பதை மறக்கவில்லை என்பதை இப்படங்கள் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். இப்படங்கள் ஒரு அடையாளமாக மட்டுமே இருந்தாலும் இவை மக்களை நிச்சயம் ஈர்க்கும் என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
விவசாயத்தை நீடித்து நிலைத்திருக்க கூடிய தொழிலாகவும் லாபகரமானதாக மாற்றுவதும் அனைவரது கடமை என்றும் துணைக் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் கொண்டாடினார். அப்போது அவர் வயலில் வேலை செய்வது போன்றும் நெற்கதிருடன் இருப்பது போன்றும் சில படங்கள் வெளியாகியிருந்தன.

