தீபக் மிஸ்ராவை நீக்கக் கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட ஏழு எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நிராகரித்துள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை கொண்டுவரக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட 7 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 64 எம்பிக்கள் மற்றும் 7 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மாநிலங்களவை தலைவர் என்ற முறையில் வெங்கய்ய நாயுடுவிடம் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த நோட்டீஸ் தொடர்பான விவரங்களை செய்தியாளர்களிடமும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பகிர்ந்துகொண்டனர். நோட்டீஸ் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அரசியலமைப்பு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி எதிர்க்கட்சிகளின் நோட்டீஸை அவர் நிராகரித்தார். ஒரு நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவர் ஏற்றுக்கொள்ளும் முன்னர் அதன் விவரங்களை வெளியிடுவது நாடாளுமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.