மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில், பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள் பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
பிரதமர் மோடி அழைப்பு விடுத்த இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மட்டுமே அதிக அளவில் கலந்து கொண்டதாக விமர்சனம் எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் எனவும் சில பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “நான் ராமோஜி ராவ்க்கு நன்றியுள்ளவன். ஏனெனில், அக்டோபர் 29 ஆம் தேதி பிரதமர் மோடி நடத்திய விருந்தில் அவரால் நான் கலந்து கொண்டேன்.
நுழைவாயிலில் உள்ளே சென்ற போது எங்களது செல்போன்களை பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டோம். அதற்காக டோக்கன் கொடுத்தார்கள். ஆனால், அதே நாளில் நிறைய பிரபலங்கள் பிரதமருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டது எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.