ரஷ்யாவிடம் நிறுத்தம்.. வெனிசுலாவுடன் துவக்கம்.. இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்!
வெனிசுலா நாட்டிலிருந்து இந்தியாவுக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் 2 பிரம்மாண்ட கப்பல்களில் வந்துகொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய் போக்குவரத்துச் செலவைக் குறைப்பதற்காக இந்தியா மிகப்பெரிய கப்பல்களில் அவற்றை வாங்கியிருக்கக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருந்தது. ஆனால், அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இந்தியா மீது கூடுதல் வரிகளையும் விதித்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இதில் சுமுகம் ஏற்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்ததாக அதிபர் ட்ரம்ப் கூறினார். இதைத் தொடர்ந்து வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைச் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் அதன்பிறகே வரி குறைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ள இந்தியா, அதை ஈடுகட்ட சவூதி அரேபியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து வாங்கி வருகிறது.
கச்சா எண்ணெய் போக்குவரத்துச் செலவைக் குறைப்பதற்காக இந்தியா மிகப்பெரிய கப்பல்களில் அவற்றை வாங்கியிருக்கக்கூடும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, 2 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கப்பல்கள் அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளன். எனினும், வெனிசுலா எண்ணெய் ரஷ்ய எண்ணெய்யைவிட கடினமானது என்பதால் அவற்றை சுத்திகரிக்கக் கூடுதல் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெனிசுலாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியா போன்ற உலக நாடுகளுக்கு அமெரிக்கா கண்காணிப்பில் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

