வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
நாட்டின் அதிவேக ரயில் எனக்கூறப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதாகி பாதியில் நின்றது குறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது
நாட்டின் அதிவேக விரைவு ரயிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். மணிக்கு 180 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்று கூறப்பட்ட வந்தே பாரத் ரயில் முதல் பயணத்திலேயே பழுதாகி பாதியில் நின்றது. முதல் முறையாக டெல்லியிலிருந்து வாரணாசிக்கு வெற்றிகரமாக வந்தடைந்த வந்தே பாரத் ரயில் மீண்டும் டெல்லிக்கு திரும்பிய போது தான் பாதி வழியில் பழுதாகி நின்றது.
டெல்லியில் இருந்து 200 கி.மீ தொலைவுக்கு முன்னதாக ரயில் பழுதாகி நின்றதால் அதில் பயணித்த பயணிகள் மற்றொரு ரயில் மூலம் மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். முதல் பயணத்திலேயே ரயில் பழுதானதால் பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இது குறித்து ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் ''ரயிலின் கடைசி நான்கு பெட்டிகளுக்கிடையேயான அடிப்படை அலகின் தொடர்பில் சிக்கல் இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயிலின் மீது வெளிப்புறத்தில் ஏதோ ஒரு பொருள் தாக்கியிருக்கிறது. அதனால் ரயிலின் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டு பிரேக்கை இயக்கியிருக்கிறது. அதன் பின்னர் பழுதுகள் சரிசெய்யப்பட்டு டெல்லிக்கு மீண்டும் இயக்கப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.