வஜ்ரா கவசம் - பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்களில் தொற்றை நீக்கும் புதிய இயந்திரம்

வஜ்ரா கவசம் - பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்களில் தொற்றை நீக்கும் புதிய இயந்திரம்
வஜ்ரா கவசம் - பாதுகாப்பு உபகரணங்கள், முகக்கவசங்களில் தொற்றை நீக்கும் புதிய இயந்திரம்

கொரோனா முன்களப் போராளிகள் தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற ஓர் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், 'மும்பையைச் சேர்ந்த நிறுவனமான இந்திரா வாட்டர் தயாரித்துள்ள கிருமி நாசினி அமைப்பு முறை, முழு உடல் கவசம், என் 95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்கும் சிறப்பம்சம் பெற்றுள்ளது. இதன் மூலம் மருத்துவப் பணியாளர்கள், உடல் கவச ஆடைகள் மற்றும் இதரப் பொருட்களை மீண்டும் பயன்படுத்த முடியும்.

இந்த இயந்திரம் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், உயிரி மருத்துவ கழிவுகளின் எண்ணிக்கையைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கும் ஏதுவாக இருக்கும். இதன்மூலம் முழு உடல் கவசங்கள் அதிக எண்ணிக்கையிலும், குறைந்த செலவிலும், அனைவருக்கும் எளிதாகவும் கிடைக்கும்.

ஒரு சில நொடிகளிலேயே பொருட்களை முழுவதும் கிருமிநாசினியால் சுத்தப்படுத்துவது இந்த இயந்திரத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும். மும்பையின் பிவண்டியில் உள்ள இந்திரா வாட்டர் நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த அமைப்பு முறை, அங்கிருந்து மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

"எங்களது அமைப்பு முறை, நுண்ணுயிர்களின் எண்ணிக்கையை 1,00,000 மடங்கு குறைக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது; அதாவது, கிருமி மற்றும் நுண்ணுயிரிகள் 99.999% சதவீதம் அழியும் என்பது பல்வேறு சோதனைகளில் தெரியவந்துள்ளது" என்று இந்திரா வாட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனரான அபிஜித் விவிஆர் கூறுகிறார்.

எளிதாக எடுத்துச்செல்லும் மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வஜ்ரா கவசம் இயந்திரத்தின் இரண்டாவது வடிவத்தை இந்த நிறுவனம், தற்போது தயாரித்து வருவதாக திரு அபிஜித் தெரிவிக்கிறார். "அளவில் மிக பெரிதான முழு உடல் கவசத்தை தூய்மைப்படுத்துவதற்குத் தகுந்தவாறு இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டது. எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இதனை வடிவமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்" என்றும் அவர் கூறுகிறார்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழில்துறை நிறுவனங்கள், ஆலைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வெளிவரும் கழிவுநீரை சுத்திகரிக்கும் பணியில் இந்திரா வாட்டர் நிறுவனம், 20 ஊழியர்களுடன் ஈடுபட்டு வருகிறது. contact@indrawater.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இந்த நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்' என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com