பள்ளி வாகனம், ஆட்டோ ‘ஸ்டிரைக்’ - மாணவர்களை அழைத்துசென்ற போலீஸ்
குஜராத்தில் பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் போராட்டத்தில் இறங்கிய நிலையில், பள்ளி மாணவர்களுக்கு காவல்துறையினர் உதவினர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிகோல் பகுதியில் கடந்த திங்கள்கிழமை, ஓடும் பள்ளி வாகனம் ஒன்றில் இருந்து மூன்று மாணவிகள் தவறிவிழுந்தனர். பள்ளி வாகனத்தில் 20க்கும் கூடுதலான மாணவர்களை ஏற்றிச்சென்றதால் மாணவிகள் கீழே விழுந்தது பின்னர் தெரியவந்தது.
இதுதொடர்பாக பள்ளி மாணவி ஒருவர் புகாரும் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்கு பெரும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து பள்ளி வாகனங்களிலும் 10 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது எனப் போக்குவரத்து துறை கண்டிப்புடன் உத்தரவிட்டது. மேலும், மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால் அதிருப்தி அடைந்த பள்ளி வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் அங்கு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தின் எதிரொலியாக மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வதோதரா எனும் பகுதியில் டிராஃபிக் போலீஸ் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் மாணவர் ஒருவரை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். இதேபோன்று மாணவி ஒருவரை பெண் போலீஸ் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு கூட்டிச்சென்றார். பள்ளிக்குச் செல்ல முடியாமல் தவித்த மாணவர்களுக்கு உதவிய இந்தக் காவல்துறையினருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.