“நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது” - நிச்சயத்தார்த்தமான பெண்ணின் மீது ஆசிட் வீசிய நபரால் அதிர்ச்சி!
உத்தரப்பிரதேசத்தின் மௌ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரீமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை, ராம் ஜனம் சிங் படேல் என்பவர் காதலித்துள்ளார். இந்தச் சூழலில், ரீமாவின் தந்தை இறந்துவிட்டதால், சகோதரிக்கு திருமணம் செய்துவைக்கும் பொறுப்பை அவரது சகோதரர் முன்வந்து எடுத்து நடத்தியுள்ளார். அந்தவகையில், ரீமாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ரீமாவுக்கு வேறொரு ஆணுடன் திருமணம் உறுதி செய்யப்பட்டதை ராமுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி திருமணச் செலவுக்காக வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பிய ரீமாவை, தனது நண்பனுடன் பைக்கில் வந்த ராம், நீ எனக்குக் கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது" என்று கூறியபடியே அவர் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில் அந்தப் பெண்ணின் முகம், தோள்பட்டை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
தற்போது அவர் 60 சதவீத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பெண்ணுக்கு மே 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. பெண்ணின் குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, போலீசார் ராம் ஜனம் சிங் படேல் மற்றும் இருவரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.