Uttarakhand tunnel: இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள்! தயார் நிலையில் மருத்துவக்குழு!
உத்தராகண்ட் மாநிலம் சில்க்யாராவில் சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள 41 தொழிலாளர்களையும் மீட்கும் முயற்சிகள் இரவு, பகலாக தொடர்கின்றன. இச்சூழலில், இன்று இரவே மீட்பு பணிகள் முடிவடைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும், மருத்துவக்குழு தயார்நிலையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து புதியத்தலைமுறை களத்தில் இருந்து மீட்பு பணிகளை பதிவுசெய்துவருகிறது.
சில்க்யாராவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளின்போது ஏற்பட்ட விபத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு, எல்லை சாலை அமைப்புக்குழு உட்பட பல்வேறு குழுக்கள் இணைந்துள்ளன. இதுதவிர ஓஎன்ஜிசி, சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம் (Sutluj Jal Vidyut Nigam), ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Limited ), தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்பு ( National Highways and Infrastructure Development Corporation Limited ), மற்றும் தெஹ்ரி ஹைட்ரோ மேம்பாட்டு நிறுவனம் (Tehri Hydro Development Corporation Limited ) ஆகியவை இணைந்து மீட்புப்பணிகளைத் தொடர்கின்றன.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்பு பணி! ஆகர் இயந்திரத்தை இயக்கும் தமிழர் சண்முகம் விளக்கம்!
இந்நிலையில் பத்தாவது நாளாக நடக்கும் மீட்பு பணியில் 800 மி.மீ. விட்டம் கொண்ட குழாய்களை பொருத்திய மீட்புக்குழு தொடர்ந்து மீட்பு முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. குழாய்கள் வழியாக தொழிலாளர்களை மீட்கும் முயற்சியாக பேரிடர் மேலாண்மைக்குழுவினர் உள்ளே செல்லவும் ஆயத்தமாகிவரும் நிலையில், மீட்பு பணி இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், மருத்துவக்குழு தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த சணுமுகம் கூறுகையில், “"கடந்த முறை பாறைகள் இடையில் விழுந்ததால் பணியை நிறைவு செய்ய முடியவில்லை. நேற்றிரவு இரண்டு குழாய்களை சுரங்கத்திற்குள் செலுத்தியுள்ளோம். இன்று மேலும் ஒரு குழாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விரைவில் மீட்பு பணி முடிவடைந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.