உத்தராகண்ட் புதிய முதல்வர் யார்? இன்று தேர்ந்தெடுக்கும் பாஜக
உள்கட்சியிலேயே எதிர்ப்பு அதிகரித்ததால் உத்தராகண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பதவி விலகியுள்ள நிலையில் அம்மாநிலத்தில் புதிய முதல்வரை பாஜக எம்எல்ஏ இன்று தேர்ந்தெடுக்கின்றனர்.
பாரதிய ஜனதாவின் ஆட்சி நடைபெற்றுவரும் அம்மாநிலத்தில், முதலமைச்சர் ராவத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது. அவரை மாற்ற வேண்டும் என்று கட்சியின் மூத்த தலைவர்களே போர்க்கொடி உயர்த்தினர். இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்ற திரிவேந்திர சிங் ராவத், பாரதிய ஜனதா மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து அவர், ஆளுநர் பேபி ராணி மவுர்யாவை சந்தித்து, தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பதவி விலகும் முடிவு டெல்லி தலைமை எடுத்தது எனக் கூறினார். முதல்வராக சேவை செய்ய தமக்கு வாய்ப்பளித்த கட்சிக்கு நன்றி தெரிவித்த அவர், அடுத்த முதல்வர் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவார் எனக் கூறினார். இதையடுத்து புதிய முதல்வர் இன்று தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமைச்சராக உள்ள தன் சிங் ராவத், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அஜய் பட், அனில் பலுனி, மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷியாரி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோரில் ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.