தொடர் பேரழிவுக்கு இரையாகும் உத்தராகண்ட்.. பின்னணிக் காரணம் என்ன?
இயற்கைப் பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக உத்தராகண்ட் உள்ளது. புவியியல்ரீதியாக தீவிர நில அதிர்வு மண்டலமான இமயமலையில் அமைந்துள்ளதால், இயல்பாகவே பேரழிவுகளுக்கு எளிதில் இரையாகும் புவி அமைப்பை உத்தராகண்ட் கொண்டுள்ளது. செங்குத்தான மலைச் சரிவுகள், குறுகிய பள்ளத்தாக்குகள் மற்றும் பலவீனமான பாறை அமைப்புகள் நிறைந்த இந்தப் பகுதியில், தீவிர மழைப்பொழிவு ஏற்படும்போது அது சட்டெனப் பெரும் வெள்ளப்பெருக்காகவும், நிலச்சரிவுகளாகவும் உருவெடுக்கிறது.
2015 முதல் 2024 வரையிலான பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 12,758 பெருமழை-வெள்ளப்பெருக்கு சம்பவங்களும், 4ஆயிரத்துக்கும் மேற்பட்டநிலச்சரிவுகளும் பதிவாகியிருப்பது இதன் அபாயகரமான சூழலுக்குச் சான்றாகும். இருப்பினும், இந்த இயற்கை அபாயங்களைப் பேரழிவுகளாக மாற்றுவதில் மனித தலையீடுகளுக்கே பெரும்பங்கு உள்ளது.
இமயமலையின் இயற்கை வரம்புகளைமீறி ஆற்றோரங்களிலும், நிலச்சரிவு மண்டலங்களிலும் கட்டப்படும் கட்டுப்பாடற்ற உள்கட்டமைப்புகள், முறையற்ற சாலை விரிவாக்கம், நீர்மின் திட்டங்கள் மற்றும் அளவுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆகியவை பாதிப்பின் வீரியத்தைப் பன்மடங்கு உயர்த்துகின்றன. சார்தாம் யாத்திரை போன்ற பருவகாலப் பயணங்களின்போது கட்டுப்பாடின்றி மக்கள் குவிவது ஆபத்தின் அளவை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
வெறும் நிவாரண உதவிகளோடு நின்றுவிடாமல், அறிவியல்பூர்வமாக முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை நிறுவுதல், சூழலியலுக்கு உகந்த உள்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தீவிரகொள்கை மாற்றங்களின் மூலமே உத்தராகண்ட் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு நிரந்தரத் தீர்வுகாண முடியும்.

