உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனாவின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசு. அதோடு முகக்கவசம் அணியாமல் முதல் முறை சிக்கினால் 1000 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை சிக்கினால் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதை முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி செய்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கடுமையான புதிய நோய் கட்டுப்பாடு விதிகளின் கீழ் இந்த அபராதம் நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக மாநில அரசு பள்ளிகளுக்கு மே 15 வரை விடுமுறையும் அறிவித்துள்ளது.
கடந்த 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சுமார் 1,46,577 பேர் புதிதாக அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 மாவட்டங்களில் இரவு 8 முதல் காலை 7 மணி வரையில் இரவு நேர ஊரடங்கையும் அந்த மாநில அரசு அமல் செய்துள்ளது.