எதிர்பாராத நேரத்தில் சட்டை பாக்கெட்டில் பாய்ந்த குண்டு - நூலிழையில் தப்பிய காவலர்
உத்தரப்பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவலர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உத்தரப்பிரதேசத்தின் ஃபரிதாபாத் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நல்பந்த் பகுதியில் போராட்டக்காரர்கள் வாகனங்களை எரித்து சேதப்படுத்தியதோடு, மக்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த காவலர்கள் மீதும் கற்களை வீசினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அந்தப் பகுதியில் ஃபரிதாபாத் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் விஜேந்திர குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
யாரும் எதிர்பாராத வேளையில் துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அதிலிருந்து வந்த தோட்டா விஜேந்திர குமாரின் மீது பாய்ந்தது. ஆனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. குண்டு துளைக்காத உடுப்பு அணிந்திருந்ததால் அதுதான் தன்னை காப்பாற்றியதாக நினைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
இந்த சம்பவம் நடந்த சில மணிநேரம் ஆன நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக தனது பர்சை எடுத்த விஜேந்திர குமார் அதிர்ச்சியடைந்தார். காரணம் அவரின் பர்சை கிழித்துக்கொண்டு ஒரு குண்டு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. விஜேந்திரர் மீது பாய்ந்த தோட்டா அவர் உடுத்தியிருந்த குண்டு துளைக்காத உடுப்பில் ஊடுருவியுள்ளது.
பின்னர் அவர் அணிந்திருந்த ஜாக்கெட்டுக்குள் புகுந்து அதன் முன்பக்கத்தில் இருந்து பர்சை கிழித்துள்ளது. பாக்கெட்டில் பர்ஸ் வைத்திருந்ததால் மயிரிழையில் விஜேந்திர குமார் உயிர் தப்பியது. பர்சில் நான்கு ஏடிஎம் கார்டுகளும் சாமி படங்களும் இருந்ததாகவும், தான் உயிர்தப்பியது தனக்கு மறுஜென்மம் என நெகிழ்ச்சியுடன் விஜய்குமார் தெரிவித்தார்.

