உ.பி. | ஒரே மாதிரி தொடரும் சோகம்.. இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தம்பதி!
ஏதாவது துயரச் சம்பவங்களோ அல்லது விபத்துகளோ எப்போதாவது நடைபெறலாம். ஆனால் எப்போதுமே அது தொடர்ந்தால் அதை என்னவென்று சொல்வது? அப்படியான ஒரு சோதனைதான் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தம்பதி ஒருவருக்கு நிகழ்ந்துள்ளது. அதாவது, தன்னுடைய மூத்த குழந்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இறந்ததோ, அதேபோல் இரண்டாவது குழந்தையும் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் ஜான்சியைச் சேர்ந்தவர் சைலேந்திரா. இவர், தனது மனைவியுடன் சோன்பத்ரா மாவட்டத்தின் துத்தி பஜார் பகுதியில் தெருவோர உணவு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 27ஆம் தேதி 9 மணியளவில், சைலேந்திரா தனது உணவுக் கடைக்காக ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையை வேகவைத்துள்ளார். அதன்பிறகு அவரும் அவரது மனைவியும் மற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்தப் பாத்திரத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அவர்களின் ஒன்றரை வயது சிறுமியை குழந்தை பிரியா, தற்செயலாக சூடான பாத்திரத்தில் விழுந்துள்ளார். அந்தக் குழந்தையை அருகில் இருந்த சமூகச் சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக கொண்டுசெல்ல பரிந்துரைத்துள்ளனர். எனினும் அங்கு மருத்துவ சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து துத்தி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) மனோஜ் சிங், ”இந்த சம்பவம் முதலில் காவல் துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், தகவல் பெற்று விசாரணை நடத்தியதில், இது ஒரு விபத்து என்று கண்டறியப்பட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களுடைய மூத்த மகளான, அப்போது சுமார் இரண்டு வயதுடைய சௌமியாவும், இதேபோன்று சூடான பாத்திரத்தில் தற்செயலாக விழுந்து இறந்ததாக அவர்கள் நினைவு கூர்ந்தனர். இந்த இரண்டு விபத்துகளும் தற்செயலாக நிகழ்ந்தது என்றாலும், அவ்விரண்டும் ஒரே மாதிரியாக நிகழ்ந்திருப்பது அப்பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.