கேரளாவிற்கு செல்வதை தவிருங்கள்: அமெரிக்கா வேண்டுகோள்..!
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு தற்போது செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தன் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. குறிப்பாக இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, கொல்லம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ராணுவத்தினரை அனுப்பியுள்ளது.
இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு தற்போது செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தன் நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கடுமையான மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாவிற்கோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காகவே தற்போது செல்வதை தவிர்க்க அமெரிக்க மக்களுக்கு அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.