பூனை மீது கொண்ட அளவுகடந்த பாசம்.. இறந்த பூனையால் பெண் எடுத்த விபரீத முடிவு!
உத்தரப்பிரதேசத்தில் ஆசை ஆசையாக வளர்க்கப்பட்ட பூனை இறந்ததால் , அதை வளர்த்துவந்தவரும் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயதான, பூஜா என்பவர். அம்ரோஹாவில் வசித்து வந்த இவர், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த ஒருவரை மணந்துகொண்டார். இருவருக்கும் ஏற்பட்ட மணகசப்பின் காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. இதனால், தனது தாய் கஜ்ரா தேவியுடன் வசித்து வந்துள்ளார் அம்ரோஹா.
கணவனை பிரிந்த பிறகு ஏற்பட்ட தனியமையை கையாள தனக்கென ஒரு பூனைக்குட்டியை எடுத்து வளர்த்து வந்த பூஜா, தனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை போல நினைத்து அதன்மீது அளவுகடந்த அன்பையும் வைத்திருந்தார்.
அதற்கென பிரத்யேக உணவு முதல் மருத்துவ செலவுவரை பூஜா செய்த செலவுகள் ஏராளம். இந்தநிலையில்தான், பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பூனை சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டது.
இறந்த பூனையை குடும்பத்தினர் பறிக்க முயன்றபோது, அதை தடுத்துநிறுத்திய பூஜா 3 நாட்களாக பூனையின் இறந்த உடலுடன் தூங்கிவந்துள்ளார். அதன்பிறகு, பூனை திரும்பவும் உயிருடன் வராது என்பதை புரிந்துகொண்ட பூஜா, சனிக்கிழமை மதியம் அவரது வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பூஜா இறந்துகிடப்பதையும், அருகில் பூனையின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்ப உறுப்பினர்கள் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூஜாவின் உடலை கைப்பற்றி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.