2014-16-ல் உபியில் அதிக சாதி, மத வன்முறைகள்: மத்திய அரசு தகவல்
2014 முதல் 2016 வரை உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் சாதி, மத வன்முறைகள் நடந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்ற மேலவையில் தகவல் தெரிவித்துள்ளது.
2014 முதல் 2016 வரை சாதி, மத வன்முறைகள் அதிகம் நடந்திருக்கும் மாநிலங்களின் பட்டியல் குறித்த தகவலை நாடளுமன்ற மேலவைக்கு மத்திய அரசு கூறியுள்ளது. அப்பட்டியலில் 450 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. உபியைத் தொடர்ந்து 279 வழக்குகளுடன் கர்நாடகா இரண்டாம் இடத்திலும், 270 வழக்குகளுடன் மஹாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
மேலும், பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசத்தில் 205 வழக்குகளும், ராஜஸ்தானில் 200 வழக்குகளும் பதிவாகி 4 மற்றும் 5 ஆவது இடங்களில் உள்ளன. பீகார் 197 வழக்குகளுடன் ஆறாம் இடத்திலும், குஜராத் 182 வழக்குகளுடன் ஏழாம் இடத்திலும் உள்ளன.
2014 முதல் 2016 வரை வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், அருணாச்சலப்பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு சாதி, மத மோதல்களோ, வன்முறைகளோ நடக்கவில்லை என்று அரசு கூறியுள்ளது.