உ.பி: அனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்..!

உ.பி: அனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்..!
உ.பி: அனுமதி பெறாமல் தாடி வளர்த்ததாக காவலர் சஸ்பெண்ட்..!

உ.பி.யில் தாடி வைத்ததற்காக இஸ்லாமிய காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்டத்தை சேர்ந்தவர் இந்த்சர் அலி. இவர் பாக்பத் மாவட்டத்தில் உள்ள ரமலா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர் நீண்ட தாடி ஒன்று வைத்திருக்கிறார். அந்த தாடியுடன்தான் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், பாக்பத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங் திடீரென்று இந்த்சர் அலியை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். சஸ்பெண்டுக்கான காரணமாக, சம்பந்தப்பட்ட காவலர் விதிமுறைகளை மீறி உரிய அனுமதியின்றி தாடி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்கள் தாடி வளர்க்கக்கூடாது என்று விதிமுறை உள்ளது. பலமுறை அறிவுறுத்தியும் தாடி எடுக்காததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி அபிஷேக் சிங் கூறியுள்ளார்.

இந்நடவடிக்கை குறித்து இந்த்சார் அலி கூறுகையில்,  "1994-ம் ஆண்டு கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தேன். அப்போதே லேசான தாடி இருந்தது. அதற்கு பிறகும் தாடி வைத்தே வருகிறேன். நான் எத்தனையோ இடத்தில் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் அங்கெல்லாம் எனக்கு இப்படியொரு பிரச்சனை வந்தது இல்லை. இந்த தாடி சம்பந்தமாக நான் பலமுறை அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தேன். ஆனாலும் அதில் ஒன்றிற்கு கூட இதுவரை பதில் இல்லை" என்றார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரஹ்மான் தி பிரிண்ட் பத்திரிகையிடம் கூறுகையில், ‘’தாடியை வைத்திருக்க காவல்துறை உயரதிகாரிளிடம் அனுமதி பெறுவது கட்டாயமாகும். சீக்கியர்களைத் தவிர, காவல்துறை சேவைகளில் வேறு யாரும் அனுமதியின்றி தாடியை வைக்கக் கூடாது. இது காவலருக்கான நடத்தை விதிமுறைகளில் இருக்கிறது’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com