மறைந்த காதல் கிளிக்கு இரங்கல் கூட்டம் நடத்திய ஆசிரியர்!
பாசமாக வளர்த்த கிளி இறந்ததை அடுத்து அதற்கு இந்துமுறைப்படி இறுதிச் சடங்கும் இரங்கல் கூட்டமும் நடத்தியுள்ளார் ஆசிரியர் ஒருவர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா ஹசன்புர் பகுதியில் வசிப்பவர், பங்கஜ் குமார் மிட்டல். ஆசிரியரான இவர், கிளி ஒன்றைச் செல்லமாக வளர்ந்து வந்தார். பாசமாக வளர்த்த காதல் கிளி, கடந்த 5-ம் தேதி திடீரென்று இறந்துவிட்டது. இதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து இந்து முறைப்படி இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளை இதற்கும் செய்தார். இதில் அவரது உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர். பின்னர் அதற்கு இரங்கல் கூட்டமும் நடத்தி பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் பங்கஜ்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘5 வருடத்துக்கு முன் இந்தக் கிளியை எடுத்து வளர்த்தேன். காலில் காயம் என்பதால் அப்போது அந்தக் கிளியால் பறக்க முடியாது. என் மகனைப் போல் வளர்த்தேன். காயத்துக்கு மருந்து போட்டு குணப்படுத்தினேன். அதன் இறப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை’ என்று சோகமாகச் சொல்கிறார் பங்கஜ்.