'செத்துப்போ..’ - ஹெல்ப்லைன் அழைப்பில் கொரோனா நோயாளியிடம் சீறிய பெண் ஊழியர்!
கொரோனா நோயாளியிடம் 'செத்துப்போ’ என கோபமாக பேசிய கொரோனா கட்டுப்பாட்டு மைய பெண் ஊழியரின் ஆடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநில பொதுமக்களுக்காக கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும், கொரோனா நோயாளிகளின் உதவிக்காகவும், வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருப்பவர்களை கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த கொரோனா கட்டுப்பாட்டு மையம், மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்கும் லக்னோவைச் சேர்ந்த சந்தோஷ் சிங் என்பவரை கொரோனா கட்டுப்பாட்டு மையத்திலிருந்து தொலைபேசி வாயிலாக ஒரு பெண் ஊழியர் தொடர்புகொண்டு சில விபரங்கள் கேட்டுள்ளார்.
அப்போது உங்கள் வீட்டில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறீர்களா என்றும், தனிமைப்படுத்தல் தொடர்பான மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து விபரங்களை பூர்த்தி செய்தி விட்டீர்களா என்றும் கேட்டுள்ளார்.
அப்போது சந்தோஷ் சிங், எங்களுக்கு எவரும் இதுபற்றி கூறவில்லை என்றும் மருத்துவர்கள் யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார். அப்போது அந்த பெண் ஊழியர் கோபமடைந்து, ‘’போ.. நீ செத்துப் போ, நீ ஒரு படிக்காதவன்’ என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
கொரோனா நோயாளியிடம் ‘இறந்து போ’ என்று அரசின் ஹெல்ப்லைன் ஊழியர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சந்தோஷ் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு புகார் அளித்துள்ளார்.