ஒரேநேரத்தில் 3 உதவியாளர்கள்.. அதிரடியாக நீக்கிய அமைச்சகம்.. மத்திய அமைச்சருக்குச் சிக்கல்?
மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவின் (Bhupender Yadav) தனிப்பட்ட பணியாளர்கள் (Personal Staff) பிரிவைச் சேர்ந்த மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் ஒரேநேரத்தில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் அரசு உயர் அதிகாரத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாருங்கள் இதுகுறித்துப் பார்க்கலாம்.
2027ஆம் ஆண்டு சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்கள், தற்போதைய அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்களின் செயல்பாடுகள், வயது மூப்பு மற்றும் துறைகளின் செயல்திறன் ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, நிதி போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சர்களில் பெரிய அளவிலான இலாகா மாற்றங்கள் இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவின் தனிப்பட்ட பணியாளர்கள் பிரிவைச் சேர்ந்த மூன்று முக்கிய உயர் அதிகாரிகள் ஒரேநேரத்தில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது. 2010ஆம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த இந்திய வருவாய் துறை அதிகாரியான அமர் சிங் (Amar Singh),நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் இவர் உடனடியாகப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, வருவாய்த் துறைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இவர், 2021ஆம் ஆண்டுமுதலே, அதாவது பூபேந்தர் யாதவ் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே அவருடன் தனிச் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து, கூடுதல் தனிச் செயலாளரான சைலேஷ் குமார் சிங் (Shailesh Kumar Singh), பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு (DoPT) திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இறுதியாக மற்றொரு கூடுதல் தனிச் செயலாளரான ஆயுஷ் சரணும் (Ayush Saran) நீக்கப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வ உத்தரவுகளின்படி, இவரது நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரின் கீழ் பணியாற்றும் மூன்று முக்கிய தனிப்பட்ட அதிகாரிகள் ஒரேநாளில், அடுத்தடுத்த உத்தரவுகள் மூலம் நீக்கப்படுவது அரசு உயர் அதிகாரத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், இந்த கூட்டு நீக்கத்திற்கான துல்லியமான பின்னணி என்ன என்பது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகமோ அல்லது அமைச்சரின் அலுவலகமோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில், இந்த உயர் அதிகாரிகளின் நீக்கம், பூபேந்தர் யாதவுக்கு ஏதேனும் சிக்கலை உண்டாக்குமா என்பது குறித்தும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

