பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் அக்டோபர் மாதம் முதல் ஒரு குவிண்டால் கரும்புக்கு கொள்முதல் விலை 340 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை 315 ரூபாயாக இருந்தது. கரும்பிலிருந்து 10.5 விழுக்காட்டிற்கும் அதிகமாக சர்க்கரை கிடைக்கும் பட்சத்தில் விவசாயிகளுக்கு கூடுதல் தொகை கிடைக்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், “உலகிலேயே கரும்புக்கான அதிகபட்ச விலை இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நலன் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
வடமாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மகளிர் பாதுகாப்புக்கான திட்டங்களுக்கு 1,179 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.