தூய்மை கங்கா திட்டத்திற்கான நிதியை குறைத்தது மத்திய அரசு
கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு பெருவாரியாக குறைத்துள்ளது
மத்திய பட்ஜெட் 2019ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி 2019-2020ம் ஆண்டுக்கான கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்துக்கான நிதி ரூ.750 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு நிர்ணயம் செய்த தொகையைவிட சில மடங்கு குறைவு எனக் கூறப்படுகிறது. கங்கை நதி சுத்தம் செய்யும் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.2250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் ரூ.750 கோடியை மட்டுமே அரசாங்கம் செலவு செய்துள்ளது.
’தி இந்து’ பத்திரிகை மே மாத வெளியிட்ட விவரத்தின்படி, 2015 கங்கை சுத்தம் செய்யும் திட்டத்தின் கீழ், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்த 100 திட்டத்தில் 10 கழிவுநீர் உள்கட்டமைப்பு திட்டங்களை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களில் பெரும்பகுதி முந்தைய அரசின் பதவிக்காலத்தில் தொடங்கப்பட்டவை எனவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
தூய்மை கங்கா திட்டத்தின் பெரும்பான்மை பகுதி மாசுப்பட்ட மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்பட்டதாகவும், இத்திட்டத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், கழிவுநீர் பாதைகளை அமைத்தல் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாத விவரத்தின்படி, பல்வேறு திட்டங்களுக்காக ரூ.28ஆயிரத்து 451 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், அதில் ரூ.6ஆயிரத்து 955 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 298 திட்டங்களில் 99 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.