ஒன்பது ஆயிரம் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசதம் சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள மேகாஷிவ்னி கிராமத்தை சேர்ந்தவர் அகாடு ஹைக். ஏழை விவசாயியான இவர் வட்டிக்கு பணம் தரும் நபர் ஒருவரிடம் தனது மளின் திருமணத்திற்காக ரூ.9 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்களது விவசாயம் பொய்த்துப்போனதால், குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையை அடைந்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அகாடு, மனமுடைந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் மனைவி சகால்பதி பேசும்போது, “கடன் இருந்தாலும் நான் பரவாயில்லை என்று தான் இருந்தேன். எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். புத்தி கூர்மையுடன் படித்துக்கொண்டிருக்கிறார். அதனால் கடனை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துவிடலாம் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. கடன் கொடுத்த நபரும் கடனை திரும்பக்கேட்டு எங்களை தொல்லை செய்யவில்லை. இருந்தாலும் அவர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இனிமேல் நாங்கள் என்ன செய்வோம். எங்கே போவோம் என்று தெரியவில்லை” என்று கூறினார்.
உயிரிழந்த விவசாயியின் மகன் கூறும் போது, ‘நாங்கள் இதுவரை எந்த வங்கியிலும், எந்தக் கடனும் வாங்கவில்லை’ என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தில் வரும் 29ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், முதலமைச்சர் கமல்நாத் தொகுதியில் ஒரு விவசாயி தற்கொலை செய்துள்ளது, அப்பகுதியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.