மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. எடுத்த இந்த முடிவு மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் குரல்வளையை வெகுநாட்களுக்கு நசுக்கி வைக்க முடியாது என்பது நிரூபணமாகி விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவு ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டிருப்பது மிகுந்த திருப்தியை அளிக்கிறது என பேசினார். இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டாலும், சிறப்பானது என்றும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை வேரோடு ஒழிப்பதற்கு இந்தியா எடுத்த முயற்சிக்கு, இது மிகப் பெரிய வெற்றி என்றும், 130 கோடி இந்தியரகளின் குரல் ஐ.நா.வில் தற்போது எதிரொலித்து விட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை வெறும் ஆரம்பம் தான் என்றும், அடுத்து நிகழவுள்ளதை காண அனைவரும் காத்திருங்கள் என்றும் பிரதமர் கூறினார்.