உபர் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பாட்டு பாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைத்தளங்கள் பல திறமையானவர்களை வெளியே கொண்டு வருகிறது. டிக்டாக் மூலம் புகழ்பெற்று திரைப்படங்களில் பலர் நடிக்கிறார்கள். சிலர் விளையாட்டாக பாட்டுப்பாடி வெளியிடும் வீடியோ வைரலாகியும் வருகிறது. சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மண்டல் பாடிய பாடல் வைரலாகி, அவர் தற்போது பாலிவுட்டில் பாடகியாகியுள்ளார். அதே போல் தற்போது உபர் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பாட்டு பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
லக்னோவைச் சேர்ந்த வினோத் என்ற ஓட்டுநர் காருக்குள் அமர்ந்து 1990ல் வெளியான ஆஷிக் திரைப்பட பாடலை பாடுகிறார். அதனை காரில் வந்த பயணி செல்போனில் படம்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், லக்னோவில் உபர் ஓட்டுநர் வினோத்தைச் சந்தித்தேன். அவர் அற்புதமான பாடகர். அவர் எனக்காக ஒரு பாடலை பாடினார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கவனித்த உபர் நிறுவனம், வினோத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இசைப் பயணம் மூலமாக புகழ்பெற்ற ஓட்டுநரான வினோத், உபர் இந்தியாவின் பக்கத்துக்கு நேர்மறையான கருத்துக்களை கொண்டு வந்துள்ளார் என தெரிவித்துள்ளது. வினோத்தின் வீடியோவை பலரும் பகிர்ந்து அவரது பாடும் திறமைக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.