ரயில் விபத்தை தடுத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு
திரிபுராவைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் தனது சாமர்த்தியத்தால் ரயில் விபத்தை தடுத்துள்ளார்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி சுமதி, திரிபுராவின் தன்சேரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். மழை காரணமாக அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மண் சரிவு ஏற்பட்டதை அறியாதநிலையில் கடந்த 15ஆம் தேதி தரம்நகரிலிருந்து தன்சேரா வழியாக பயணிகள் ரயில் ஒன்று அகர்தலாவுக்கு சென்று கொண்டிருந்தது. ரயில் வருவதை கவனித்த சிறுமி சுமதி உடனடியாக சட்டையை காட்டி ரயிலை தடுத்து நிறுத்தியுள்ளார். அவரின் துரித செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் இரண்டாயிரம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டனர். சிறுமியை பாராட்டி அவரது தந்தைக்கு ரயில்வே துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுமி சுமதிக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டி வருகின்றனர். அவரது சேவையைப் பாராட்டி திரிபுரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதிப்ராய் பர்மன் தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து கவுரவப்படுத்தியுள்ளார்.