“முத்தலாக் தடை மசோதாவை ஆதரியுங்கள்” எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

“முத்தலாக் தடை மசோதாவை ஆதரியுங்கள்” எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

“முத்தலாக் தடை மசோதாவை ஆதரியுங்கள்” எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
Published on

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்குமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

முத்தலாக் தடை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதா கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் முத்தலாக் தடை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. 

அதனைத் தொடர்ந்து, இந்த சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முத்தலாக் தடை சட்டத்திருத்த மசோதாவை, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று‌ எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே, முத்தலாக் சட்டத்திற்கு மாநிலங்களவையிலும் அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என அதிமுக எம்.பியும், மக்களவைத் துணை தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். திமுகவும் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கப்படும் என அறிவித்துள்ளது.

245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிகபட்சமாக 73 எம்பிக்கள் உள்ளனர். அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். மசோதாவுக்கு பாஜக, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம், அகாலிதள் போன்ற சில கட்சிகள் மட்டுமே ஆதரிக்கின்றன.

மற்ற கட்சிகள் மசோதாவில் திருத்தங்கள் செய்தால் மட்டுமே ஆதரிக்க முடியும் என கூறுகின்றன. எனவே தற்போதைய நிலையில் மசோதாவை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்களே அதிகம் என்பதால் அதை நிறைவேற்றுவதில் அரசு பெறும் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை - 245

  • பாரதிய ஜனதா - 73
  • காங்கிரஸ் - 50
  • அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் - தலா 13
  • பிஜு ஜனதா தளம் - 9
  • ஜனதாதளம், தெலுங்குதேசம், டிஆர்எஸ் - தலா 6
  • ராஷ்ட்ரீய ஜனதாதளம், மார்க்சிஸ்ட், -தலா 5
  • திமுக, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் -தலா 4
  • சிவசேனா, ஆம்ஆத்மி, அகாலிதளம் -தலா 3
  • பிற கட்சிகள் - 20

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் விஜய் கோயல், மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற ஒத்துழைக்குமாறு ஞாயிறன்று எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடம் பேசியிருப்பதாகத் தெரிவித்தார்.

இஸ்லாமிய சகோதரிகளுக்கு நீதியை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது என்ற விஜய் கோயல், பெரும் மனவலியில் இருக்கும் அவர்களுக்கு நிம்மதி அளிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com