கேரளாவில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரம் ஒன்று வெட்டப்பட்டநிலையில், அதில் குடியிருந்த ஏராளமான பறவைகள் கொத்தாக விழுந்து மடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஏ.ஆர். நகர் பஞ்சாயத்துக்குட்பட்ட வி.கே.பாடி என்றப் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு, சாலை ஓரத்தில் இருந்த பழமை வாய்ந்த மிகப்பெரிதான மரம் ஒன்று திடீரென வெட்டி சாய்க்கப்பட்டது. அப்போது, மரத்தில் அமர்ந்திருந்த பறவைகளில் ஏராளமானவை தப்பித்தநிலையில், பறக்க முடியாத, கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் சாலையில் பொத்தென விழுந்து உயிரிழந்தன. கொத்துகொத்தாக நூற்றுக்கும் மேற்பேட்ட பறவைகள் விழுந்து உயிரிழந்த வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக பறவைகளை கொடூரமாக கொன்ற சம்பவம் குறித்து, வி.கே.பாடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையின் ஒப்புதல் இல்லாமல், விதிகளை மீறி மரங்களை வெட்டி சாய்ந்த ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மேலும் மரத்தை வெட்டி சாய்த்து பறவைகள் உயிரிழக்க காரணமான ஜேசிபி இயந்திரத்தின் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து வி.கே.பாடி வார்டு உறுப்பினர் லியாகத் அலி தெரிவிக்கும்போது, இதுபோன்ற மிருகத்தனமான செயலை அவர்கள் செய்திருக்கக் கூடாது என்றும், ஏராளமான பைகளில், இறந்துபோன பறவைகளை அங்கிருந்து அகற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் தெரிவிக்கையில், மரங்களை வெட்ட வனத்துறை அனுமதி தராதநிலையில், பல விதிகளை மீறி மரங்களை வெட்டியுள்ளதாக கூறியுள்ளார்.
அவ்வாறு அனுமதி அளித்திருந்தாலும் கூட, பறவைகள் புகலிடத்திற்காக அங்கு இருக்கும்போது, அந்த மரத்தை வெட்டியிருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், இந்த கோர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.