ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் நிதி நெருக்கடி அதிகரித்துவிட்டதாலும், இந்த பட்ஜெட்டில் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ரயில்வே பட்ஜெட் இந்தாண்டு முதல் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் நிதி நெருக்கடி அதிகரித்துவிட்டதாலும் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்பந்தத்தில் ரயில்வே துறை உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, பட்ஜெட்டிலோ அல்லது அதற்கு பின்போ கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பயணிகள் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக டிக்கெட் கட்டணத்துடன் சிறிய தொகை வசூலிப்பது குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2016-ம் ஆண்டில் ரயில் விபத்துகள் அதிகளவில் நடந்தது பயணிகள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் கூடுதல் தொகை ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன் கட்டமைப்பு வளர்ச்சிக்காக கணிசமான தொகை ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிறப்பு கட்டண ரயில்கள் திட்டம் விரிவாக்கப்படும் என்றும் ரயில் பயணிகள் சலுகைகளை பெற ஆதார் எண் கட்டாயம் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படுகின்றன.