பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உட்பட நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உட்பட நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உட்பட நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு & சிலிண்டர், உரங்களின் மானியம் அதிகரிப்பு என பல்வேறு அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் கூறியதில்,

1 . பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முந்தைய அரசாங்கங்களைவிட பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தில் பணவீக்கம் குறைவாக உள்ளது.

2. உலக நாடுகள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது; கொரோனா பெருந்தொற்று காலத்தினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தொடங்கிய நேரத்தில் உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட தடை மற்றும் பற்றாக்குறை காரணமாக பல்வேறு உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது.

3. "பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா" திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு உலக அளவில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

4. சர்வதேச அளவில் சவாலான சூழல் நீடித்த போதிலும் இந்தியாவில் அத்தியாவசிய பொருள்களுக்கான பற்றாக்குறை இல்லை எனும் சூழலை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் இந்தியாவில் அத்தகைய நிலைகள் இல்லை எனவும் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு மத்திய அரசு எப்போதும் உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

5. விவசாயிகளின் மிக முக்கிய தேவையான உரத்தின் விலை சர்வதேச அளவில் உயர்ந்து வரும் சூழலில் இந்திய விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் உரத்திற்கான மானியம் 1.05 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 1.10 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

6. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும். விலை குறைப்பின் மூலமாக மத்திய அரசுக்கு கலால் வரியின் மூலம் கிடைக்கக்கூடிய 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

7. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்திருந்த நிலையில் அதன் பின்பு மாநில அரசுகள் வாட் வரியை குறைத்தனர். அதில் ஒரு சில மாநிலங்கள் வாட் வரியை குறைக்காமல் உள்ள நிலையில் இம்முறையாவது மாநில அரசிற்கான வாட் வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

8. இந்த ஆண்டு "பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா" திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளர்களுக்கு வருடத்திற்கு தலா 12 சிலிண்டர் எனும் வீதம் ஒவ்வொரு சிலிண்டர்க்கும் 200 ரூபாய் மானியம் வழங்கப்படும்.

9. பிளாஸ்டிக் மூல பொருள்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படுகிறது; இதனால் இவற்றைச் சார்ந்துள்ள பொருட்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10. இரும்பு மற்றும் எஃகு பொருள்களுக்கான சுங்க வரியை குறைப்பது தொடர்பாக அளவீடும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக "ரா மெட்டீரியல்" பொருள்களுக்கு சுங்கவரி குறைக்கப்படும் எனவும் எக்ஃகு பொருள்களுக்கான ஏற்றுமதி வரி உயர்த்தப்படும்.

11. சிமெண்ட் விலையை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இந்த அறிவிப்புகள் அனைத்தும் அரசாணையாக வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com