பழங்குடிகளின் போராட்டத்தை கெளரவித்த கூகுள் டூடுல்

பழங்குடிகளின் போராட்டத்தை கெளரவித்த கூகுள் டூடுல்

பழங்குடிகளின் போராட்டத்தை கெளரவித்த கூகுள் டூடுல்
Published on

இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய பசுமைப் போராட்டத்தை கூகுள் நிறுவனம் டூடுல் போட்டுக் கொண்டாடி வருகிறது. 

உலகில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகளை தனது டூடுல் பக்கத்தில் வெளியிட்டு கூகுள் வலைத்தளம் அவர்களை பெருமைப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இன்று அதன் தொடர்ச்சியாக அந்த வலைத்தளம் இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய பசுமைப் போராட்டத்தை அங்கீகரித்து டூடுல் வெளியிட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இயற்கை ஆர்வளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில்‘சிப்கோ இயக்கம்’ நடைப்பெற்று 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை அடையாளப்படுத்தும் விதமாகவே இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிப்கோ இயக்கத்தை பரவலாக்கியவர் சாண்டி பிரசாத். இவர் உத்தரகாண்ட் மாநிலம் கோபேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர். மலைவாழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, காடுகளை அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்காக 1973ம் ஆண்டு சிப்கோ இயக்கத்தை கட்டி எழுப்பினார். கூடவே தொடர்ந்து இயற்கை வளங்கள் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களால் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடுவதற்காக மக்களை தட்டி எழுப்பினார். மேலும் வனப்பகுதியை விட்டு வேலை வாய்ப்புகளுக்காக வெளியேறி வந்த பூர்வக்குடி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளை ஒட்டியே வேலை வாய்ப்புகளை அமைத்து தந்தார். இந்த இயக்கம் மலைவாழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு நிறைந்ததாக மாறியது. மக்கள் வனங்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

சாண்டியால் இந்தப் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும் அதற்கான முதல் விதையை விதைத்தவர் அம்ரிதா தேவி. அவர்தான் 18 நூற்றாண்டில் பசுமை இயக்கத்தின் முன்னோடி. ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மன்னன் அஜய்சிங், தனது கட்டுப்பாட்டில் இருந்த ‘மார்வார்’ வனப்பகுதியில் ஓர் அரண்மனையை கட்ட முடிவெடுத்தார். அதற்காக அந்தப் பகுதியிலிருந்த மரங்களை வெட்டிச் சாய்க்க, தன் பணியாளர்களை அனுப்பினார். அதற்கு எதிராக ‘பிஷ்னேய்’ இன மக்கள் களத்தில் குதித்தனர். போராட முன் வந்தனர். வெட்டப்பட இருக்கும் மரங்களை கட்டி அணைத்துக் கொண்டு மறித்து நின்றனர். இந்தப் போராட்டத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கூட மரங்களை கட்டிக் கொண்டு நின்றது உலகை உலுக்கியது. ‘எங்களை வெட்டிச் சாய்த்துவிட்டு மரங்கள் மீது கை வையுங்கள்’ என அவர்கள் முஷ்டியை முறுக்கினர். போராட்டக்காரர்களை ஒடுக்க அம்ரிதா தேவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளை வெட்டிக் கொன்றனர் அரசரின் ஆட்கள். அதன் பின் ஒவ்வொன்றாக 363 மரங்களை வெட்டி வீழ்த்தினர். 
பழங்குடிகளின் மொழியில் ‘சிப்கோ’ என்றால் கட்டிக் கொள்ளுதல் என அர்த்தம். இந்தப் பழங்குடிகளின் போராட்டத்தைத்தான் கூகுள் இன்று கெளரவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com