2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி, ஷாஹித் பல்வா உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராவர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு குறித்த விசாரணை கடந்த 2011-ஆம் ஆண்டு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் தொடங்கியது. இதில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணையில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தீர்ப்பு தேதி குறித்த அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோன நிலையில், தமிழகத்தில் ஆர் கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் தினமான இன்று 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ளது.

