கண் தானம் செய்வதாக கூறிய தமிழக முதல்வருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை பாராட்டு
கண் தானம் செய்ய உள்ளதாக கூறிய தமிழக முதலமைச்சருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்
கண் தானம் தினத்தில் அதனை ஊக்குவிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி கண் தானம் செய்வதாக அறிவித்தார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “ஒளியற்ற விழிகளுக்கு ஒளியாகி இவ்வுலகை காணச்செய்திட அனைவரும் மனுமுவந்து கண்தானம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தும் தேசிய கண் தான நாளையொட்டி கண்தானம் செய்வதில் உளமார மகிழ்ச்சி கொள்கிறேன்.
அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டுமென இந்நாளில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கண்தானம் செய்வோம்!” என்று பதிவிட்டார். இந்நிலையில் கண் தானம் செய்வதாக கூறிய தமிழக முதலமைச்சருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
''கண் தானத்தை ஊக்குவிக்கும் வண்ணம் எனது கண்களை தானம் செய்ய உள்ளேன் ” என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கண் தானம் செய்ய உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.முதலமைச்சரின் இச்செயலால் பொது மக்களும் தானாக முன்வந்து தனது கண்களை தானம் செய்வர்.
இதனால் லட்சக்கணக்கான பார்வையில்லாதவர்கள் பயன் பெறுவர். கண் தானம் செய்வதால் வெளிச்சம் இல்லாதவர்களின் வாழ்க்கையில் நாம் ஒளி ஏற்றலாம். எனவே அனைவரும் கண் தானம் செய்ய முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்