தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10-ஆம் வகுப்பு மாணவி உள்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகளும், ராகுல் உள்ளிட்ட தேசிய தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல், மம்தா பானர்ஜியும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மம்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் இப்பொழுது தான் பெங்களூரு வந்தடைந்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தொடர்பான சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழ்நாட்டு மக்களின் துக்கமான நேரத்தில் என்னுடைய பிரார்த்தனைகள் அவர்கள் பக்கம் இருக்கும். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி அகமது பட்டேல், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, இந்திய அரசும், தமிழக அரசும் ஏன் அமைதையாக இருக்கிறது?” என்று குறிப்பிட்டுள்ளார்.