ஆங்கிலேயர் ஆட்சியை ஆவணப்படமாக ஏன் எடுக்கவில்லை? - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேள்வி

ஆங்கிலேயர் ஆட்சியை ஆவணப்படமாக ஏன் எடுக்கவில்லை? - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேள்வி
ஆங்கிலேயர் ஆட்சியை ஆவணப்படமாக ஏன் எடுக்கவில்லை? - கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேள்வி

ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை ஆவணப்படங்களாக ஏன் எடுக்கவில்லை? எனக் கேள்வியெழுப்பியுள்ளார் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்.  

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்து சமய மாநாடு ஒன்றில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார். இந்தக் கூட்டம் வட அமெரிக்காவைச் சேர்ந்த கேரள இந்துகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய ஆளுநர் ஆரிப் முகமது கான், பிரதமர் நரேந்திர மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

''நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா தனது சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து துண்டுதுண்டாக உடையும் என எண்ணியவர்கள் இப்போது வருத்தத்தில் உள்ளனர். உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் தற்போது சிலர் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் பிபிசி ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளனர். இவர்கள் ஏன் ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த அட்டூழியங்களை ஆவணப்படங்களாக ஏன் எடுக்கவில்லை?

இந்த விஷயத்தில் நம் நாட்டில் இருக்கும் சில மக்களையும் நினைத்து நான் கவலைப்படுகிறேன். ஏனென்றால் நீதித்துறையின் தீர்ப்பை விட ஆவணப்படத்தின் கருத்துகளை அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இந்தியா தற்போது ஜி20 உச்சிமாநாட்டை தலைமை தாங்கி நடத்த உள்ளது. இந்த காலத்தில் இந்த ஆவணப்படம் ஏன் வெளியாகி உள்ளது?

இந்தியா ஏழை நாடு அல்ல. 1947இல் தெற்காசியாவின் வறுமையின் சின்னமாக இந்தியா இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. இன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தலைமை தாங்குகிறார்கள். உலகமே இந்தியாவின் திறனை உணர்ந்து வருகிறது. நாம் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தால் நம்மை யாரும் அச்சுறுத்த முடியாது என்பதை நம்முடைய வரலாற்றிலிருந்து உலகம் அறிந்திருக்கிறது. மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த இந்த சக்திகளை நாங்கள் பயன்படுத்தியதில்லை. மாறாக ஆண் மற்றும் பெண்ணின் சாத்தியமான தெய்வீகத்தை நாங்கள் நம்புகிறோம்" என்று ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறினார்.

குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. 'India: The Modi Question' என்ற தலைப்பில் 2 பாகங்களாக பிபிசி வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது. ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது. இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு தடை விதித்தது.

ஆனால், நாட்டின் பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. தடையை மீறி பல்கலைக்கழங்களில் ஒளிபரப்பப்படும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தை திரையிடுவதில் இருந்து தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com