இந்து பெண்களைத் தொட்டால்...: மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

இந்து பெண்களைத் தொட்டால்...: மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!
இந்து பெண்களைத் தொட்டால்...: மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

’இந்து பெண்களைத் தொட்டால் கையை வெட்ட வேண்டும்’ என்று மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் இணை அமைச்சராக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா தொகுதியை சேர்ந்த அவர், அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். 

குடகு மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ’’சமீபத்தில் சபரிமலைக்கு இரண்டு பெண்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். இது, இந்துக்களின் மீது பட்டப்பகலில் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை. சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது.

நமது சிந்தனையில் அடிப்படை மாற்றம் இருக்க வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்து பெண்கள் மீது யாராவது கையை வைத்தால், சாதியை விட்டுவிடுங்கள், அவர்கள் கை யை வெட்டுங்கள்’’ என்று ஆவேசமாக கூறினார். 

அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளர் மதுசூதன் கூறும் போது, “அனந்தகுமார் ஹெக்டே பேசியது தவறு. அவர் பேச்சுக்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை. இதை நியாயப்படுத்த மாட்டோம்’’ என்றார்.

அரசியலமைப்பை மாற்றுவதாகவும், நாங்கள் இருப்பதே அதை மாற்றுவதற்காகத் தான் என்றும் சமீபத்தில் இவர் பேசிய பேச்சு, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எழுத்தாளர்களுக்கு பெற்றோர்கள் இல்லை என்று கூறியும் சர்ச்சையை கிளப்பி இருந்தார். இப்போது இப்படி பேசியிருப்பதும் சர்ச்சையாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com