இந்தியாவின் தேசியப் பறவை மயில். ஆம், அத்தனை அழகுக்கும் சொந்தமான பறவை மயில் என்றால் அது மிகையல்ல. தேசியப் பறவை என்றாலும் அனைத்து இடங்களிலும் நம்மால் மயில்களை பார்க்க முடியாது. பொதுவாக காடுகளில், செழிப்பான வயல்களில், மலைகளில் அல்லது மலைகளையொட்டியப் பகுதிகளில் மயில்களை நாம் கண்டுகளிக்கலாம். மயில்களை பார்ப்பதென்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயமே.
பொதுவாக கிராம வாசிகள் எல்லோரும் மயில்களை எளிதாகப் பார்த்துவிடுவார்கள். ஆனால் நகர வாசிகளுக்குதான் எப்போதும் கஷ்டம். அவர்கள் மயில்களை உயிரியல் பூங்காவில் மட்டுமே ரசிக்க முடியும். அதுவும் சென்னை போன்ற நகரகங்களில் மயில்களை காண்பது இயலாத காரியம். இதில் கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் ஓரளவுக்கு மயில்களை அதிகப்படியாக காணலாம். மயிலிடம் நமக்கு எல்லோருக்கும் பிடித்த விஷயம் அதன் தோகைதான்.
இதில் ஆண் மயில்களுக்கு மட்டுமே நீண்ட தோகை உண்டு. பெண் மயில்களுக்கு தோகை இருக்காது. மழை வரும் அறிகுறி வந்தால் மயில் தோகையை விரித்து நடந்துச் செல்லும் அல்லது அழகாக அசைவுகளை கொடுக்கும். மயில் சற்றே கனமான பறவை என்பதால் அது நெடுந்தூரம் பறக்காது என பலரும் நினைப்பார்கள். ஆனால் மயில் நெடுந்தூரம் பறக்கவும் செய்யும் உயரமாகவும் செல்லும். அத்தகைய மயில் ஒன்று பறக்கும் காட்சியொன்றை "ஸ்லோ மோஷனில்" ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர்.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா ஊரடங்கு காலம் அமல்படுத்தப்பட்ட நாள்களிலிருந்து பல வன உயிரனங்களின் அழகான வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இப்போது ராஜஸ்தான் மாநிலத்தின் ரத்தம்போர் தேசியப் பூங்காவில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஹர்ஷா கிருஷ்ணமூர்த்தி எடுத்துள்ள மயில் பறக்கும் 8 நொடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.