தனி ஒருவராக குழந்தைக்கு இறுதிச்சடங்கு : மனங்களை வென்ற தேநீர்க்கடைக்காரர்!
பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான பிரேசர் டவுன் பகுதியில் தேநீர்க்கடை நடத்திவருபவர் அப்துல் ரசாக், கேரளா கண்ணூரைச் சேர்ந்தவர். சிறுநீரகக் கோளாறு மற்றும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குழந்தையின் உடலுக்கு கனத்த இதயத்துடன் அவர் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மக்களை நெகிழவைத்துள்ளது.
நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த மனிதர், இறந்த குழந்தையின் உடலை கைகளில் ஏந்திச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி துன்பியல் காட்சியாக மனித மனங்களை நொறுக்கிவிட்டது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நிலையில் தேநீர்க்கடை நடத்திவரும் ரசாக், தன்னார்வலராகவும் பொதுச்சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்.
பெங்களூர் செயிண்ட் ஜான் மருத்துவமனையில் இருந்து குழந்தையின் உடலை எடுத்துச் சென்ற அவர், "அந்தப் பெண் குழந்தை மேற்குவங்கத்தைச் சேர்ந்தது. சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது" என்கிறார். இந்தச் செய்தி பெங்களூரு மிர்ரர் நாளிதழில் வெளியாகியுள்ளது.
தன்னார்வலர்களிடம் இருந்து தகவல் கிடைத்தும் மருத்துவமனைக்குச் சென்ற அவர், ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச் சென்று உயிரிழந்த குழந்தைக்கு இறுதிச்சடங்குகளைச் செய்து மக்களின் மனங்களின் இடம்பிடித்துவிட்டார். அப்போது தன் செல்லத்தை இழந்த துக்கத்துடன் நின்றிருந்த குழந்தையின் பெற்றோர் ரசாக்கின் தன்னமலமற்ற சேவைக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்தனர்.