சோலையாறு-ஆழியாறு வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு அளிக்க மறுத்து ஒத்திவைத்துள்ளது.
தமிழகம்-கேரளா இடையேயான நீர் பகிர்வு குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அதில் ஆழியாறு அணையிலிருந்துதும்,சோலையாறு நீர்த்தேக்கத்திலிருந்தும் தமிழகம், கேரளாவுக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரின் அளவு ஏற்கனவே உள்ள ஒப்பந்தப்படி தொடர வேண்டுமா அல்லது வறட்சி காலங்களில் தண்ணீர் பகிர்வு மாற்றப்பட வேண்டுமா என்பது போன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையே கடந்த 1970 நீர் பங்கீட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆழியாறு அணையிலிருந்து 7.25 டிஎம்சி தண்ணீரும், சோலையாறு 12.3 டிஎம்சி தண்ணீரும் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக தமிழகம் கேரளத்துக்கு உரிய நீரை கொடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு வறட்சி நிலவுவதாக காரணம் கூறி கேரள மாநிலத்துக்கு முழு நீரையும் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு கூறியது. இந்நிலையில் இது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக மற்றும் கேரள வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.எனவே 1970 ஒப்பந்தபடி கேரளத்துக்கான நீரை கொடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தது.
ஆனால் நீதிபதிகள், கேரளத்தின் மனு தொடர்பாக தமிழக அரசுக்கு மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் எந்த அளவுக்கு தேவை உள்ளது போன்ற பல்வேறு விஷயங்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. மேலும் இன்று விசாரணையின் போது,கேரளம் தரப்பில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கோரப்பட்டது, ஆனால் இடைக்கால உத்தரவு அளிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து,தமிழகம் மற்றும் கேரளாவுக்கு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் மூன்று வார அவகாசம் அளித்து ஒத்திவைத்துள்ளது.