கொரோனாவை வீழ்த்தி மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்ற முதியவர்!
கொரோனா பாதித்த 73 வயது முதியவர் ஒருவர் மாரத்தானில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது முதியவர்கள்தான்’ என்பதை மருத்துவ உலகமே அறிவித்த உண்மை. இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த மாரத்தான் வீரர் கமலக்ஷா ராவ் என்ற 73 வயது முதியவர் கடந்த ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். பின்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி மூன்று நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டதோடு பத்து நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரின் மன உறுதியும், ஆலோசனைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டதுமே கமலக்ஷா ராவை விரைவில் கொரோனாவால் இருந்து மீட்டுக்கொண்டு வந்துவிட்டது.
கமலக்ஷா ராவ் தனது 67 வயதிலிருந்துதான் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடி வருகிறார். தற்போது கொரோனா பாதித்ததால் மீண்டும் ஓட முடியுமா? என்ற தயக்கம் இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைகளுடன் தனது பயிற்சியை தொடர்ந்துள்ளார்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியாக கடந்தவாரம் லண்டனில் நடந்த மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்துள்ளார். 7 மணிநேரத்தில் 42 கிலோமீட்டர் ஓடி சாதித்துள்ளார். ஏற்கனவே, இவர் 100 கிலோ மீட்டரெல்லாம் ஓடியிருக்கிறார். ’கொரோனா மட்டும் தாக்கவில்லை என்றால் தனது கனவான 160 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி கடந்திருப்பேன்’ என்று வருத்தமுடன் பேசுகிறார் கமலக்ஷா ராவ்