'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது'

'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது'
'சபரிமலை கோவிலில் தந்திரிகளுக்கும் உரிமை இருக்கிறது'

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு  கடந்த 17 ஆம் தேதி ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பெண்கள் சபரிமலை கோயில் சந்நிதானத்துக்கு செல்ல முயன்றதால் பரபரப்பாகவே காணப்பட்டது. பல போராட்டங்களால் யாரும் கடைசிவரை கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பலரும், கோயிலின் நடைப்பந்தல் வரை சென்று திரும்பியுள்ளனர். ஆனால், யாராலும் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை.

இந்த விவகாரத்தில் கேரள அரசு, தேவஸம் போர்டு மற்றும் பந்தள ராஜ குடும்பத்தினரிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால் சுமூகத் தன்மை ஏற்படாமல் இருக்கிறது. அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, பந்தள ராஜ குடும்பத்தினர் தீர்ப்பு வந்த நாள் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவஸம் போர்டினால் கேரள அரசையும் எதிர்க்க முடியாது, பந்தள ராஜ வம்சத்தையும் எதிர்க்க முடியாது என்பதால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் அதன் நிர்வாகிகள். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஒரு கேள்வியை எழுப்பினார். சபரிமலைக்கு யார் சொந்தக்காரர்? சபரிமலை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? என்பதுதான். 1949ம் ஆண்டு போடப்பட்ட முத்தரப்பு உடன்படிக்கை பற்றி அவர் பேசினார். தேவஸம் போர்டு தொடங்கப்பட்டு சபரிமலையின் வரவு செலவுகள் மற்றும் அதன் பராமரிப்பு உரிமைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அப்படி யாருமே உரிமை கொண்டாடவில்லையே? சபரிமலை யாருடையது தான் என்று கேள்வி எழுப்பினார். அப்போது பலர் தேவஸம் போர்டுக்கே உரிமை உள்ளது என பலர் குரல் எழுப்பினர்.

பெண்கள் உள்ளே நுழைந்தால் கோயிலை மூடிவிடுவோம் என சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி ரஜூவரு கண்டராவு எச்சரிக்கை விடுத்திருந்தார். அன்றைய தினமே பந்தள ராஜ குடும்பமும் தேவஸம் போர்டு நிர்வாகத்தினருக்கு கடிதம் எழுதினர் அதில், “சபரிமலை கோயிலில் சடங்குகள் ஏதேனும் மீறப்பட்டால், கோயிலை மூடிவிடுங்கள். தந்திரிகளின் ஒப்புதலுடன் மீண்டும் நடை திறக்கப்பட வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்போது கேரள அமைச்சர்கள் பந்தள குடும்பத்தையும், தந்திரிகளையும் கடுமையாக விமர்சித்தனர். இது குறித்து பேசிய கேரள மாநில பொதுப் பணித்துறை அமைச்சர் ஜி.சுதாகரன் "ஒரு தந்திரி கோயிலை பூட்டி விடுவேன் என்று எப்படி மிரட்டலாம்? கோயில் நடையை நினைத்தபோதெல்லாம் மூடுவதற்கு அதென்ன பெட்டிக் கடையா? இல்ல தந்திரிதான் அதன் உரிமையாளரா? சரி பந்தள ராஜ குடும்பத்துக்கு தந்திரியை நடையை மூட சொல்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என கடுமையாக விமர்சித்தார். 

இது குறித்து கருத்து தெரிவித்த தேவஸம் போர்டின் முன்னாள் ஆணையர் நலினாக்‌ஷன் நாயர், " பாரம்பரியமும், ஐதீகமும் கருவறையிலையோ அல்லது கோயிலின் சந்நிதானப் பகுதியில் மீறப்படும்போது நடையை மூடுவதற்கான அதிகாரம் தந்திரிகளுக்கு இருக்கிறது. இதில் யாரும் தலையிட முடியாது. பந்தள ராஜ குடும்பம் அரசுடன் இணைந்து போக வேண்டும் என்று எதுவுமில்லை. கோயிலில் பாரம்பரியம் மீறப்படும் போது அதனை கேள்வி கேட்கவும், முடிவு எடுக்கவும் பந்தள ராஜ குடும்பத்திற்கு உரிமை உண்டு. மேலும் சபரிமலையில் இருந்து கிடைக்கும் வருமானம் கோவிலின் வளர்ச்சிக்காகவும், பக்தர்களின் வசதிக்காகவும் மட்டுமே செலவிடப்படுகிறது. இதிலும் முறைகேடுகள் நடந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com