
நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தினக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி, “ ‘ஹர் கர் திரங்கா’ என்ற இயக்கத்தின்கீழ் 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை மக்கள் அவரவர் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
‘என் மண்... என் தேசம்’ என்று இயக்கத்தின்கீழ் அவரவர் பகுதிகளில் இந்த தேசத்தின் புனித மண்ணை கையில் ஏந்தியவாறு செல்பி எடுத்து சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதன்படி, பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை டிபியாக வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் சோர்பூரைச் சேர்ந்தவர் ஜாவித் மமுத். இவர், ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், கடந்த 2009ம் ஆண்டு முதல் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய சகோதரரான ரயீஸ் மாட்டூ, சோர்பூரில் உள்ள தனது வீட்டில் இன்று தேசியக்கொடியை ஏற்றியுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. ஆனால், PTI வெளியிட்டிருக்கும் வீடியோக்களில் அவர், தேசியக் கொடியை கையில் வைத்திருப்பதாகவே தெரிகிறது.
இதுகுறித்து அவர், “என் மனதிலிருந்து தேசியக் கொடியை நான் ஏந்துகிறேன். இங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் 14ம் தேதி நான் என் கடையில் அமர்ந்திருக்கிறேன். வழக்கமாக இந்த நாட்களில் இங்கு 2 முதல் 3 நாட்கள் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்பிருந்த கட்சிகள் அரசியல் விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தன.
என் சகோதரர் 2009ஆம் ஆண்டு பயங்கரவாதியாக மாறினார். அதன்பின் அவர் பற்றி எந்த தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அவர் உயிரோடு இருந்தால் உடனடியாக திரும்பி வருமாறு நான் கோரிக்கை வைக்கிறேன். காஷ்மீரில் நிலைமை மாறிவிட்டது. பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.