''இவர் தான் எங்கள் கடவுள்'' - நடிகர் சோனு சூட்க்கு கோயில் கட்டிய கிராம மக்கள்!
நடிகர் சோனு சூட்க்கு தெலங்கானாவில் உள்ள ஒரு கிராம மக்கள் கோயில் கட்டியுள்ளனர்
திரை நடிகர் சோனு சூட் கொரோனா பொதுமுடக்க காலத்தில் உதவி தேவைப்பட்ட பலருக்கும் முதல் ஆளாக சென்று உதவினார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் தொடங்கி விவசாயிகள், மாணவர்கள், பசியால் வாடியவர்கள் என அவர் உதவிக் கொண்டிருந்தார். அவரது பணிகளை நெட்டிசன்களும் பாராட்டி சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானாவின் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள டப்பா கிராமத்தை சேர்ந்த உள்ளூர் மக்கள் சோனுவின் சமூக பணியை என்றென்றும் நினைவு கூறும் வகையில் கோயில் ஒன்றை தங்களது கிராமத்தில் எழுப்பியுள்ளனர். இந்த கோயிலில் சோனுவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது சிலையை செதுக்கிய சிற்பியை கொண்டே உள்ளூர் மக்கள் இந்த கோயிலை திறந்துள்ளனர்.
“கொரோனா கால ஊரடங்கின் போது உதவி தேவைப்பட்டவர்களுக்கு இல்லை என சொல்லாமல் வாரி கொடுத்த கர்ணன் அவர். மனிதனை மனிதனாக பார்க்கும் அவரது உயர்ந்த உள்ளம் எங்களது உள்ளத்தை கவர்ந்து விட்ட காரணத்தினால் கோயில் கட்டி வழிபட்டு வருகிறோம். இவர் தான் எங்கள் கடவுள்” என உள்ளூரை சேர்ந்தவர்கள் ஒருமித்த குரலில் உரக்க சொல்கின்றனர்.
கோயிலில் சோனு சூட் சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டு வருகின்றனர்.