குடிபோதை, சூதாட்டம்:  3 பெண் குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்ற கொடூர தந்தை!

குடிபோதை, சூதாட்டம்:  3 பெண் குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்ற கொடூர தந்தை!
குடிபோதை, சூதாட்டம்:  3 பெண் குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்ற கொடூர தந்தை!
தெலங்கானாவில் குடிபோதைக்கும், சூதாட்டத்திற்கும் அடிமையான தந்தை ஒருவர் தன்னுடைய 3 மகள்களை நீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலங்கானாவின் காமாரெட்டி மாவட்டத்தில் உள்ள தட்கோல் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது பயாஸ். இவர் தனது மனைவி 3 மகள்கள் ஒரு மகனுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார். கூலி வேலை செய்து வரும் முகமது மதுப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையானவர் என சொல்லப்படுகிறது. தனது வருமானத்தை மதுவுக்கும், சூதுவுக்குமே செலவழித்து வந்த நிலையில், தையல் தொழில் செய்து அவரது மனைவியே குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். குடித்துவிட்டு குடும்பத்தைக் கவனிக்காத நிலையில் முகமதுவுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், முகமதுவின் நடவடிக்கைகள் பிடிக்காத அவரது மனைவி தன் நான்கு குழந்தைகளுடன் அதே ஊரில் உள்ள சகோதரன் வீட்டிற்கு சென்றுள்ளார். தன் மனைவியை நேரில் சந்தித்த முகமது, தீய பழக்கங்களை விட்டுவிட்டு தான் திருந்திவிடுவதாக உறுதி அளித்துள்ளார். இதனை நம்பி அவரது மனைவியும் மீண்டும் அவரது வீட்டிற்கே வந்துள்ளார். வீட்டிற்கு வந்த முகமது 11 ,9 மற்றும் 7 வயதான தன்னுடைய 3 பெண் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். அவர்களுடன் 5 வயதான மகனும் உடன் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து 5 வயது மகன் மட்டும் அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளான். உடனடியாக பதறிப்போன தாய், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரைத் தேடியுள்ளார். 
முகமது தன் குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டி அருகே சென்றுகொண்டிருந்ததாக பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்க, மனைவி அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஈரத்துணிகளுடன் முகமது நின்றுள்ளார். மூன்று பெண் குழந்தைகள் குறித்தும் முகமது சரியான பதிலும் அளிக்கவில்லை. இதனை அடுத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு  3 பெண் குழந்தைகளையும் தேடியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தண்ணீர் தொட்டி அருகே குழந்தைகளின் செருப்புகள் கிடப்பதை பார்த்தனர். 
சந்தேகமடைந்த போலீசார் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி தேடினர். அங்கு இறந்த நிலையில் இருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இது தொடர்பாக முகமதுவை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ள முகமது பயாஸ், மனைவி மீதுள்ள கோபத்தால் குழந்தைகளை கொன்றதாக தெரிவித்துள்ளார். மேலும், தப்பிவிடாமல் இருக்க 3 குழந்தைகளையும் நீரில் அழுத்தி அதன் மேல் ஏறி அமர்ந்துகொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com